
சரபங்கா திட்டத்திற்கு தடை கோரி வழக்கு

காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 18 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது. 2 கோடி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருப்பதோடு, 25 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி உள்ளது.கடந்தாண்டு நவ. 12ல் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயக்கட்டுகளான எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் தாலுகாவில் உள்ள 4,738 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா நீர்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ரூ.565 கோடி செலவில், மேட்டூர் அணையின் இடது கரையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று திப்பம்பட்டியில் ஏரி போல தேக்கி வைக்கவுள்ளனர். சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமையும் இந்த ஏரி, மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தானாகவே நிரம்பிய பின், மேட்டூர் அணையின் 120 அடி நிரம்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கிருந்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். அடுத்தாண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.இந்த திட்டம் நிறைவேற்றினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.